சீட்டுக்கு சண்டை... ஓடும் ரயிலில் இருந்து 8 வயது சிறுமியை தூக்கி வீசிய சக பயணி!
இந்தூர்: இருக்கை பிரச்சினை காரணமாக ஓடும் ரயிலில் இருந்து 8 வயது சிறுமியை சக பயணி ஒருவர் தூக்கி வெளியே வீசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதிக்கு அருகே ரத்லாம்- ஆக்ரா போர்ட் ரயிலில் நடந்துள்ளது. ரயில் பொது வகுப்பு பெட்டியில் ஒரு இருக்கையில் அமர்வதற்காக தஸ்லிம் (45) என்ற நபருக்கும், அலி என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரயில் ரத்லாமுக்கும் - மண்டிசோருக்கும் இடையே சென்ற போது, அந்த இருக்கையில் அலி தனது 8 வயது மகளை அமர வைத்து விட்டு கழிவறை சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட தஸ்லிம், அச்சிறுமியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆத்திரத்தில் அச்சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து விட்டு, தான் அந்த இருக்கையில் அமர்ந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் உடனடியாக சிறுமியின் தந்தைக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தஸ்லிமைக் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமியைப் பலத்த காயங்களுடன் தண்டவாளம் அருகே மீட்ட ரயில்வே ஊழியர்கள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அச்சிறுமியின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications