குடிசைப் பகுதி குழந்தைகளுக்காக... 9 வயது குழந்தை நடத்தும் “லைப்ரரி”- போபாலில்!
போபால்: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுமி ஒருவர் அங்கிருக்கும் குழந்தைகளுக்காக சிறிய நூலகம் ஒன்றினை நடத்தி வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
போபாலின் அரேரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 9 வயதான முஸ்கான் அஹிர்வார் என்கின்ற சிறுமி. இவர் தனது குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அறிவினை வளர்க்கும் வகையில் நூலகம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
"பால் புஸ்டகாலே" என்று அழைக்கப்படும் இந்த நூலகம் அம்மாநில கல்வி வாரியத்தின் பின்புறம் அமைந்துள்ளது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டிற்கு வெளியே தனது நூலகத்தினை அமைக்கின்றார்.
மாநில கல்வி வாரியம்(ராஜ்ய சிக்ஷா கேந்திரா) அளித்துள்ள புத்தகங்களை பாய் ஒன்றிலும், கயிறு ஒன்றிலும் தொங்க விடுகின்றார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் அவரிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று படித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.