சூரத்தில் 8 நாட்கள் டார்ச்சர்: தொடர் பலாத்காரம்: அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை
சூரத்தில் 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி, 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி யாரென்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சூரத்தில் உள்ள பேஸ்தான் பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் கிடந்ததை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
80 -க்கும் மேற்பட்ட காயங்கள்
5 மணி நேர பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
மர ஆயுதத்தால் தாக்குதல்
மேலும் அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் கிடந்தன. 8 நாட்கள் ஒரு இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மரத்தினாலான ஆயுதத்தால் ஏற்பட்டவை என்றும் தெரியவந்தது.
சிறுமி உடல்
அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்து ஒன்று முதல் 7 நாட்களுக்கு முன்னதாக நடந்தவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சி சம்பவம்
அந்த சிறுமி யாரென்ற அடையாளம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர். காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.