ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமா
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11-ம் தேதி முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அதிக பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. தினமும் 2,00,000-க்கும் மேல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கை அமலில் கொண்டு வந்துள்ளன.

என்ஜின் டிரைவர்களுக்கு கொரோனா
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நன்கு ஒத்துழைத்தால் நாட்டில் முழு ஊரடங்கு போட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் என்ஜின் டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சியல்டா பிரிவு ரயில்வேயில் 90 டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

56 ரயில்கள் ரத்து
''நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா காரணமாக சுமார் 90 டிரைவர்கள் மற்றும் ரயில் கார்டுகள் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 56 உள்ளூர் ரயில்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்" என்று கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் எக்லபியா சக்ரவர்த்தி கூறினார்.

பயணிகளுக்கு பாதிப்பில்லை
பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, முடிந்தவரை பயன்பாடு குறைவான நேரத்தில் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் இன்னும் பல ரயில் என்ஜின் டிரைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் சில ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. மேற்கு வங்கத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில் சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11-ம் தேதி முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications