பாலக்காட்டில் பதைபதைக்கும் சம்பவம்.. பள்ளி மாணவிகள் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்து பறிபோன 4 உயிர்
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகள் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாலை விதிகளை மீறுதல், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் நேரிடுகின்றன. முறையான வாகன பராமரிப்பு, சாலை விதிகள் பின்பற்றுதல் குறித்து காவல் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை காரணமாக சாலை விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பள்ளியில் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த 4 மாணவிகள் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளான இர்ஃபானா, ஆயிஷா, ரீடா, மித்தா ஆகியோர் தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக இன்று மாலை 4 மணி அளவில் கோழிக்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலை வழியாக சிமெண்ட் லாரி ஒன்று வந்துள்ளது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி 4 மாணவிகள் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவி பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிமெண்ட் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு செய்யும் என்றும் உறுதி அளித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக நியாயமான முறையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications