பெண்களிடம் செயின் பறித்தே 2 கிலோ தங்கம் சேர்த்த பலே வாலிபர்கள் பெங்களூரில் கைது!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 42 தங்க செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரையும், அவர்களிடம் நகை வாங்கி பணம் கொடுத்து வந்த ஒரு வரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. முகவரி கேட்பது போல நடிப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி பெண்களின் செயின்களை பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்தது.
இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் போலீசாருக்கு பெரும் தலைவலியை உருவாக்கின. எனவே பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்துவந்தனர். செயின் பறிப்பு நடந்த ஓரிடத்தில் பதிவான சிசிடிவி காமிரா காட்சிகள் அடிப்படையில், தார்வார் நகரை சேர்ந்த அபுசார் அலி (25) மற்றும் அபுல் ஹாசன் (23) ஆகிய இரு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தார்வாரை பூர்வீகமாக கொண்ட இவர்கள் பெங்களூரில் வசித்தபடி பைக்கில் சென்று பெண்களிடம் செயின் பறித்து சம்பாதித்து வந்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 2 கிலோ எடையுள்ள தங்க ஆபாரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளந. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சமாகும். ஹாசன் நகரை சேர்ந்த கிரீஷ் கவுடா என்பவரிடம் இவ்விரு கொள்ளையர்களும் நகைகளை கொடுத்து பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து கிரீஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையர்களிடமிருந்து 21 சிம்கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.