வகுப்பறையில் ஆசிரியர் கேட்ட சின்ன கேள்வி.. கோபத்தில் தலையிலேயே குத்திக்கொன்ற 11ம் வகுப்பு மாணவன்
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்க நடந்து கொண்டே இருக்கின்றன. தங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரை விரோதிகளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள் மீது கோபத்தில் இருக்கும் மாணவர்கள் சிலர் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்யும் நிகழ்வும் நடக்கிறது.

சிறு சங்கடடங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் வளரும் குழந்தைகள், தோல்விகளை பக்குவமாக கையாளத்தெரியாத குழந்தைகள், நினைத்ததை அடைய தவறான வழிக்கு செல்கிறார்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகளே பின்னாளில் மிகவும் மோசமான நிலையை அடைகிறார்கள். தங்களுக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் ஆத்திரத்தில் எல்லை மீறுகிறார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நடந்துள்ளது.
அஸ்ஸாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் இயங்கும் சாய் விகாஷ் அகடாமி பள்ளியில் சம்பத்தன்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்திருக்கிறார்.. என்னப்பா, சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தது ஏன் கேட்டு அவரது வகுப்பாசிரியர் (அறிவியல் ஆசிரியர்) ராஜேஷ் பாபு பிஜ்வாடா அவரை கண்டித்தார். அத்துடன் வகுப்பில் இருந்து வெளியே தயவு செய்து செல்லுமாறு பணிவாகவே ஆசிரியர் ராஜேஷ் கூறியிருக்கிறார். ஆனால் மாணவர் அங்கேயே நின்றார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் ராஜேஷ் சத்தமாக அவரை வெளியே போ என்று கூறினார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த மாணவர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆசிரியரின் தலையில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் ராஜேஷ் பாபு பிஜ்வாடா வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்து பிற மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் அந்த ஆசிரியரை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications