இறந்து போனதாக உடற்கூறுக்கு எடுத்து செல்லப்பட்ட நபர்.. பிரேத பரிசோதனை அறையில் எழுந்த அதிசயம்
மத்திய பிரதேசத்தில் இறந்து போனதாக உடற்கூறுக்கு எடுத்து செல்லப்பட்ட நபர், பிரேத பரிசோதனை அறையில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் இறந்து போனதாக உடற்கூறுக்கு எடுத்து செல்லப்பட்ட நபர், பிரேத பரிசோதனை அறையில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹிமான்ஸா பரத்வாஜ் என்ற சிந்த்வாரா பகுதியை சேர்ந்த நபர்தான் இந்த அதிசயத்திற்கு சொந்தக்காரர். இவருக்கு நேற்று பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அவரை நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு இவரை காப்பற்ற முடியாது என்று கூறியுள்ளனர்.
மூளைச்சாவு
இதையடுத்து அதே பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு இவர் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவரது மூளை இறந்துவிட்டது என்றுள்ளார். இதயம் மட்டுமே துடிக்கிறது என்று கூறியுள்ளனர்.
மரணம்
ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயம் துடிப்பதும் நின்று இருக்கிறது. இதையடுத்து இவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
மரணம் அடையவில்லை
ஆனால் பிரேத பரிசோதனை செய்ய இருந்த மருத்துவர், அவரது இதயம் துடிப்பதை கவனித்து இருக்கிறார். இதையடுத்து அவர் மீண்டும் சோதனை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மூளை செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார் என்று மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதிசயம்
இந்த நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் மூளை சாவு அடைந்துவிட்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பலரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவரது உறவினர்கள் இது முழுக்க முழுக்க அதிசயம் என்று கூறி வருகிறார்கள்.