வறண்டு கிடக்கும் உ.பி... தண்ணீர் திருடியதாக விவசாயி கைது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விவசாயத்திற்காக தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டல்காண்ட் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள உர்மில் அணையில் விவசாயி ஹிராலால் யாதவ் (55) என்பவர் தண்ணீர் திருடியதாக போலீசாருக்கு புகார் வந்தது. அணையின் அடைப்பு பகுதியை சேதப்படுத்தி, சிறிய கால்வாய் வெட்டி அதன்மூலம் தனது வயலுக்கு ஹிராலால் யாதவ் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மகோபா ஜால் சன்ஸ்தான் என்ற பொறியாளர் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக ஹிராலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹிராலாலின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். ஏற்கனவே, உர்மில் அணையின் 'வால்வு' பகுதி சேதம் அடைந்து இருந்ததாகவும், ஆனால் அரசு தனது குறைபாடுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே ஹிராலால் மீது குற்றம் சாட்டியுள்ளது என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications