உ.பி.: முஸ்லீம்களுடன் சேர்ந்து புனித ரமலான் நோன்பு வைக்கும் 'லால் பாபு'
கோரக்பூர்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த லால் பாபு என்ற இந்து ஒருவர் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர் லால் பாபு. கோரக்பூரில் பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். இந்துவான அவர் கடந்த 29 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் முஸ்லீம்களுடன் சேர்ந்து நோன்பு வைத்து வருகிறார்.
நோன்பு வைப்பதோடு இல்லாமல் முஸ்லீம்களுக்கு இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கிறார். பாபு அப்பகுதி முஸ்லீம்களின் மரியாதையை பெற்றுள்ளார். பாபுவின் தந்தை ரமலான் மாதத்தில் நோன்பு இருந்துள்ளார். அந்த பழக்கம் தான் பாபுவுக்கும் வந்துள்ளது.
பாபு பற்றி கோரக்பூரைச் சேர்ந்த மெஹ்ராஜ் ஆலம் கூறுகையில்,
எனக்கு பாபுவை சிறுவயதில் இருந்தே தெரியும். அவரது தந்தை ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பார். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவரைப் போன்றே பாபுவும் நோன்பு வைக்கிறார். பாபு எங்களுடன் நன்றாக பழகுவார். இந்து, முஸ்லீம் என்ற பாகுபாடே எங்களுக்குள் இல்லை. அவர் எங்களுடன் சேர்ந்து நோன்பு திறப்பார் என்றார்.