மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. நாளைமுதல் மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசரகால, முக்கிய மருத்துவ சேவைகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவி இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார். அவர் வியாழக்கிழமை இரவுப் பணியில் இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பணியில் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க முறையான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் புளூடூத் ஹெட்போன் மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளது. மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியுள்ளார். சஞ்சய்ராய்தான் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் என்பதற்கான முக்கிய ஆதாரங்களாக இவை மாறியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாளை முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளைத் தவிர மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணியாற்ற மாட்டார்கள். பயிற்சி மருத்துவருக்கு உரிய நீதி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத் துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விதிமுறைகளை விதித்து வெளியிட வேண்டும் . மத்திய சுகாதாரத் துறை பாதுகாப்புச் சட்டம் விரைந்து அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு அமைகக் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், இந்த கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications