இப்படி கிளம்பிட்டாங்களே.. மகளுக்கு திருமணம் நடக்காததால் வாஸ்து ஏஜென்சி மீது கேஸ் போட்ட நபர்
பெங்களூர்: வாஸ்து பார்த்து வீட்டில் மாற்றங்கள் செய்த பிறகும், அதிருஷ்டம் ஏற்படவில்லை என்று கூறி, வாஸ்து நிபுணர் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான், நுகர்வோர் விழிப்புணர்வு இந்த காலத்தில் அதிகரித்துள்ள போதிலும், வாஸ்து போன்ற நம்பிக்கைகள் பலிக்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டிருப்பது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா (பழைய பெயர் பிஜாப்பூர்) பகுதியை சேர்ந்த மகாதேவ் துதிகால் என்பவர்தான் இப்படி வழக்கு தொடர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ளார்.

வாஸ்து ஏஜென்சி
மகாதேவ் துதிகால், சட்டத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தனது 3 பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போனதால், 2 வருடங்கள் முன்பு வாஸ்து ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டுள்ளார். தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்துதான் இந்த ஏஜென்சியை அவர் அணுகியுள்ளார்.

வீட்டில் பல மாற்றங்கள்
வாஸ்து ஏஜென்சியில், பரிகாரம் சொல்வதற்காக ரூ.11,600 கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டை சுற்றி பார்த்த வாஸ்து நிபுணர், கெட்ட சக்திகள் காரணமாகத்தான், மகாதேவ் மகள்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகவில்லை எனக் கூறினர். இதையடுத்து வாஸ்துப்படி வீடு திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகியுள்ளது.

மோசடி புகார்
ஆனால், ஓராண்டுக்கு பிறகும் மகாதேவ் மகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. எனவே, விஜயபுரா மாவட்ட நுகர்வோர் அமைப்பிடம் மகாதேவ் புகார் அளித்தார். தன்னை மோசடி செய்துவிட்டதாக வாஸ்து நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளார்.

சட்டம் சொல்கிறது
எந்த ஒரு நிறுவனம் வணிக நோக்கத்தோடு செயல்பட்டாலும் அது ஏமாற்றினால் வழக்கு தொடர முடியும் என்பது சட்டத்தில் உள்ள அம்சம் என்று கூறுகிறார் மகாதேவ். இனிமேல் வாஸ்து நிபுணர்கள் வீட்டை வாஸ்து பார்த்து கட்டிக்கொள்வது சிறப்பு போலும்.












Click it and Unblock the Notifications