பற்றி எரிந்த காஷ்மீர் போலீஸ் நிலையம்.. பயங்கரவாதியிடம் பறிமுதலான வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதால் பதற்றம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மற்றும் உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையம் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த வெடிப்பொருட்கள் திடீரென்று வெடித்து சிதறியதில் மொத்தம் 8 பேர் படுகாயமடைந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நவ்காம் என்ற போலீஸ் நிலையம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த போலீஸ் நிலையம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்து அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்களை இந்த போலீஸ் நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் நவ்காம் போலீஸ் நிலையத்தின் தனிஅறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நள்ளிரவில் திடீரென்று வெடிப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தீப்பிழம்பு பல அடி உயரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், கூடுதல் போலீசார், ராணுவத்தினர் உடனடியாக போலீஸ் நிலையம் விரைந்தனர். தீயில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இது எதிர்பாராத விபத்து என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பயங்கரவாதி டாக்டரும்,டெல்லியில் கார் வெடிப்பை நிகழ்த்திய உமரின் கூட்டாளியுமான முஜாமிலிடம் இருந்து சுமார் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வெடிப்பொருட்கள் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஆய்வுக்காக சாம்பிள் எடுத்தபோது திடீரென்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையமே பற்றி எரிந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதாவது ஜம்மு காஷ்மீரில் கடந்த அக்டோபர் மாதம் மத்தியில் போலீஸ் மற்றும் ராணுவத்தை மிரட்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து நவ்கம் மற்றும் ஸ்ரீநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து போஸ்டர் ஒட்டியதாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆசிப் நிசார் தார் என்ற ஷகில், யாசீர் அல் அஷ்ரப் மற்றும் மசூத் அகமது என்ற ஷாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பிறகு மவுலியாக இருக்கும் இர்பான் அகமது கைது செய்யப்பட்டார். இவர் போஸ்டர் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசரணை நடத்திய போலீசார் அடுத்தடுத்து பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய டாக்டர்களை கைது செய்தனர். அதன்படி ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முஜாமில், பெண் டாக்டரான ஷாகின் ஷாகித் கைது செய்யப்பட்டனர். முஜாமில் கைதை தொடர்ந்து தான் அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய உமர் டெல்லி செங்கோட்டை அருகே காரை ஓட்டி சென்று வெடிக்க வைத்தான்.
முன்னதாக கைதான முஜாமிலிடம் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட், ஐஇடி வகை குண்டு தயாரிப்பதற்கான 2,900 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரசாயனங்கள், டெட்டனேட்டர்கள், வயர்கள், குண்டு தயாரிக்க தேவையான பிற பொருட்களும் அடங்கும். இந்த பொருட்கள் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் இன்று திடீரென்று வெடித்து சிதறி உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications