ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா ?
பெங்களூர்: கர்நாடக முன்னாள் அமைச்சரும் பிரபல சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

தனது மகளின் திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ள ரெட்டி. அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழை இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக புதுமையான விதத்தில் வடிவமைத்து வழங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
திருமணத்துக்கான அழைப்பிதழ் எல்சிடி வடிவில் மிகவும் ஆடம்பரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்.
திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர அழைப்பிதழை தயாரிக்க மட்டும் ரூ. 2.25 கோடி செலவு செய்யப்பட்டதாம்.
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக விஜயநகர பேரரசு மாடலில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. திருமண விழாவில் பாலிவுட், தெலுங்கு, கன்னட திரையுலகினர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் உள்ளே வராத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த திருமணம் பிரபலமான நபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
திருமண செலவு ரூ.500 கோடி வரை ஆகும் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications