எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதல்..காஷ்மீரில் விமானப்படை வாகனம் மீது அட்டாக்! வீர மரணமடைந்த வீரர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்னும் முற்றிலும் பதற்றம் தனியாத நிலையில், பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஒரு வீரர் வீர மரணமடைந்துள்ளார்.
பிப்ரவரி 14 2019 அன்று புல்வாமாவின் லெத்போரா பகுதியில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேர்தலுக்கு முன்னதாக நடந்த இந்த தாக்குதல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் தேர்தல் நடந்து வரும் நிலையில் காஷ்மீரில் விமானப் படை கான்வாயில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.
சனிக்கிழமை பூஞ்ச் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையின் விமானப்படை வீரர்கள் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டனர். அதில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்த நிலையில் மற்றொருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற மூன்று வீரர்களும் நிலையாக இருப்பதாகவும் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இது கோழைத்தனமான தாக்குதல் என காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே தாக்குதல் நடைபெற்ற போதே வீரர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அப்போது தான் 5 பேருக்கு குண்டடி பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பூஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப் பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications