மணிப்பூர் தாக்குதல்.. சிக்கிய நாகாலாந்து பயங்கரவாதத் தலைவனிடம் என்.ஐ.ஏ. விசாரணை..
டெல்லி : மணிப்பூர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாகாலாந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
மணிப்பூர் மாநிலம் சண்டெல் பகுதியில், கடந்த 4 ஆம் தேதி நாகாலாந்தை தனி நாடான கோரும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக, என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கான சதி திட்டத்தில் ஈடுபட்டதாக என்.எஸ்.சி.என்.-(கப்லாங் பிரிவு) என்ற நாகாலாந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 40 வயதான கும்லோ அபி அனால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு தொடர்பாக, அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார். மணிப்பூர் தாக்குதலில் இவருக்குள்ள தொடர்பை மறைப்பதற்காக, இவர் வேண்டுமென்றே அந்த வழக்கில் கைதானது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை அபி அனாலை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மணிப்பூர் தாக்குதலில் 23 நாகாலாந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 21 பேரில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் மூன்று குழுக்களாக வந்து தாக்குதலில் ஈடுபட்டதும், மியான்மர் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் இருந்து அவர்கள் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கெனவே சரணடைந்திருந்த நாகாலாந்து பயங்கரவாதிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில், மணிப்பூர் தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன.
நாகாலாந்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 2 நாகாலாந்து பயங்கரவாதிகளின் முகாம்களை ராணுவத்தினர் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications