15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன?
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் தாய் ஒருவர் 15 மாத குழந்தையை சிறிதும் ஈவு இரக்கமின்றி எட்டி உதைப்பதும், கழுத்தை நெரிப்பதும் போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள கோப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஒடிஸாவில் ஒரு பெண்ணுக்கு 15 மாத குழந்தை உள்ளது. இந்த குழந்தையை அந்த பெண் மிக கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
அந்த காட்சிகளுடன் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். அப்போது அதை பார்த்த போலீஸாருக்கு ஒரே அதிர்ச்சி.

மாற்றாந்தாய்
காரணம் அந்த பெண் பெற்ற தாய் போல் அல்லாமல் ஏதோ மாற்றாந்தாய் போல் நடந்து கொண்டார். குழந்தையை கண்மூடித்தனமாக அடிப்பதும், ஏதோ பந்து போல் உதைப்பதும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கழுத்தையும் நெரிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

தாய், தந்தையருக்கும் கொடுமை
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அவர் மீது புகார் அளித்தார். தன்னுடைய குழந்தையை இது போல் கொடுமைப்படுத்துவது அல்லாமல் நிறைய நேரங்களில் தனது பெற்றோரையும் அவர் கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்ததாகவும் அந்த கணவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விசாரணை
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் என் குழந்தைக்கு காயங்கள் ஏதாவது இருக்கும். இதனால் சந்தேகப்பட்டு என் மனைவிக்கு தெரியாமல் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் தான் இந்த காட்சிகள் படமாகியுள்ளன என்றார். அந்த வீடியோ காட்சிகளை கணவரே சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

கணவர் மீது கடும் குற்றச்சாட்டு
அப்போது அவர் கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். மாறாக தனது கணவரும் தனது மாமியார் , மாமனாரும்தான் தன்னை கொடுமைப்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அவர்கள் உணவு கூட அளிப்பதில்லை என்றும் இது போன்ற காரணங்களால் நான் பல தடவை கஷ்டப்பட்டுள்ளேன். பசிக் கொடுமையால் தான் எனது குழந்தையிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள.












Click it and Unblock the Notifications