ஆதார் வழக்குகள்: அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் விரைவில் நியமனம்- உச்சநீதிமன்றம்
ஆதார் வழக்குகள் தொடர்பான அரசியல் சாசன பெஞ்ச் விரைவில் நியமிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
டெல்லி: ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதார் அடையாள அட்டையை கட்டயமாக்கியதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி அமைத்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும் நவம்பர் கடைசிவாரத்தில் அரசியல் சாசன பெஞ்ச் இந்த விசாரணையை மேற்கொள்ளும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இன்று அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் சாசன பெஞ்ச் அடுத்த வாரம் அமைக்கப்படும். ஆதார் அட்டை இணைப்புக்கான தடை குறித்து அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் என்றார்.