“வயிறு நிறைய சோறு 10 ரூபாய்ல போட்டே ஆகனும்” - காங்கிரஸ்க்கு புது செக் வைக்கும் ஆம் ஆத்மி
டெல்லி: ரூ.10 தர்றோம்... வயிறு நிறைய சோறு போடுவீங்களா என்று கேட்டு காங்கிரசுக்கு புது தலைவலியை ஆரம்பித்துள்ளனர் ஆம் ஆத்மி கட்சியினர்.
சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வோர் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
"ரூ.10 இருந்தாலே ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் கொள்ள முடியும்" என பாப்பர் கூறினார். இதற்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக பாப்பர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.இந்த விவகாரத்தை மீண்டும் கிளறியிருக்கிறது ஆம் ஆத்மி.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷாஜியா இல்மி. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பாப்பர்.
இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஷாஜியா இல்மி அளித்த பேட்டியில் , "நானும் என் கட்சிக்காரர்களும் ஆளுக்கு ஒரு 10 ரூபாய் நோட்டுடன் ராஜ் பாப்பரிடம் போகப் போகிறோம். 10 ரூபாயில் அவரால் எங்களுக்கு வயிறாற சோறு போட முடியுமா என்பதை பார்க்கப் போகிறோம்" என கூறியிருக்கிறார். இதனால், ராஜ் பாப்பருக்கு புது தலைவலி ஆரம்பித்துள்ளது.
ஷாஜியா இல்மி முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், அந்த கருத்தை ஷாஜியா மறுத்து வந்த நிலையில் காஜியாபாத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனாலும், தனக்கு டெல்லியில் சீட் வழங்கப்படவில்லையே என ஒருபுறம் அவர் கவலைப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கவலை ஒருபுறம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அளவுக்கு ஆறுதல் அடையலாமே என்கின்றனர் விவரம் தெரிந்த அவரது கட்சியினர்.