தப்பு செஞ்சிருக்கார் அருண் ஜெட்லி... ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு... பதவி விலக வலியுறுத்தல்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பொறுப்பு வகித்தபோது பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் குமார் விஸ்வாஸ், தீபக் வாஜ்பாய், ராகவ்சந்தா, அசுதோஷ் ஆகியோர் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. டெல்லி கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் 54 கோடிக்கு எவ்வித கணக்கும் இல்லை. போலியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் பெயரில் பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
அருண்ஜெட்லி காலத்தில் 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அந்த நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.55 லட்சம் வீதம் 3 கம்பெனி்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதன் மூலம் அவருக்கு நெருக்கமான நண்பர்களின் கம்பெனிகள் கோடிக்கணக்கில் லாபம் அடைந்துள்ளன. செலவு செய்யப்பட்ட பணத்திற்கு முறையான ரசீது இல்லை. இந்த சங்கத்தின் பொருளாளர் நரேந்திரபத்திராவுக்கும் ,ஜெட்லிக்கும் உள்ள உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .
எனவே இந்த விவகாரத்தில் ஜெட்லி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமானால் ஜெட்லியை அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications