போலி நிறுவனங்களிடமிருந்து ஆம் ஆத்மிக்கு ஹவாலா முறையில் நன்கொடை வந்ததா?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு போலியான நிறுவனத்திடமிருந்து ஹவாலா முறையில் நன்கொடை வந்துள்ளதாகவும், வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் ஆம்ஆத்மி தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சில முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு, நன்கொடை கொடுத்த நிறுவனத்தை பற்றி விசாரிக்கும்போது, அந்தநிறுவனத்துக்கு எந்தவித வருமானமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபடவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் எப்படி நன்கொடை கொடுத்திருக்க முடியும்? ஆம் ஆத்மிக்கு நன்கொடை கொடுத்தவர் 11 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் வசிப்பதாக கூறப்படும் முகவரியில், ஒரு பாழடைந்த வீடு தான் உள்ளது. ஆம் ஆத்மியின் இந்த முறைகேடு குறித்து சட்டப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மிக்கு கோல்மைன் பில்ட்காம் பி லிட், இன்போலான்ஸ் சாப்ட்வேர் சொல்யூசன் லிட், சன்விசன் ஏஜென்சி மற்றும் ஸ்கைலைன் இரும்பு மற்றும் உருக்கு பி லிட் ஆகிய பெயரில் நன்கொடை வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில், எங்களுக்கு எதிராக சதி நடக்கிறது. தோல்விபயம் காரணமாக பா.ஜ.,இவ்வாறு செய்கிறது. டெல்லி மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள். இந்த புகார்கள் மக்களுக்கு தான் சோதனை என கூறினார்.
ஹவாலா வழிமுறையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டு இருப்பதாக பா.ஜனதாவைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications