குஜராத்தில் அசுரனாக வளர்ந்து நிற்கும் ஆம் ஆத்மி.. பழங்குடியின மக்களின் பேராதரவு.. பாஜகவுக்கு "கிலி"
காந்திநகர்: குஜராத்தில் ஏற்கனவே விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஆம் ஆத்மிக்கு தற்போது பழங்குடியின மக்கள் மத்தியிலும் அதிக அளவில் ஆதரவு பெருகி இருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத்தில் தற்போது காங்கிரஸுக்கு மாற்றாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியிருக்கும் ஆம் ஆத்மி, பாஜகவை ஆட்சி அரியணையில் இருந்து நீக்க கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது.
பாஜகவால் வஞ்சிக்கப்பட்டதாக கருதும் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினரை தனக்கு ஆதரவாக ஒன்று திரட்டும் முயற்சியில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது, குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.
குஜராத்தில் தளர்ந்த பாஜகவின் இரும்புப் பிடி.. மோடிக்கு பிறகு களையிழந்த காவி? என்ன நடக்கிறது? பின்னணி
அசுரனாக வலம் வரும் ஆம் ஆத்மி..
குஜராத் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை காட்டிலும் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மாநிலம் முழுவதும் அசுரத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. பஞ்சாபை போல குஜராத்திலும் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அர்விந்த் கேஜ்ரிவாலும், அவரது கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை குஜராத் மண்ணுக்கேற்ற அரசியலை ஆம் ஆத்மி கையில் எடுத்திருப்பதால் அக்கட்சிக்கு அம்மாநில மக்கள் பெரும் வரவேற்பு இருக்கிறது.
"பக்கா ஸ்கெட்ச்" போடும் கேஜ்ரிவால்..
குறிப்பாக, பாஜக மீது கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கும் ஜாதிகளை தனித்தனியாக பிரித்து, அந்த சமூகத்தினரின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆம் ஆத்மி ஈடுபட்டிருக்கிறது. வெறும் வளர்ச்சி, கல்வி, பள்ளிக்கூடம் என மட்டுமே ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்யும் என நினைத்த பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஜாதி அரசியலை அக்கட்சி கையில் எடுத்தது பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், குஜராத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பிராந்தியத்தில் இருக்கும் தொகுதிகளின் வெற்றி - தோல்வியை அங்கு வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் தான் தீர்மானித்து வருகின்றனர். இதை புரிந்துகொண்ட ஆம் ஆத்மி, ஜாதி அரசியலை கச்சிதமாக கையாண்டு வருகிறது.
பாஜக மீது பழங்குடியினர்கள் கோபம்..
குறிப்பாக படேல், கோலி, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய ஜாதிகளை ஆம் ஆத்மி குறி வைத்துள்ளது. இதில் பெரும்பாலான பழங்குடியின சமூகங்கள் ஆம் ஆத்மிக்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்துள்ளன. சமீபத்தில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கூட பழங்குடியின சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பிராந்தியங்களில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. ஏனெனில், கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பழங்குடியினருக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பாஜக அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனால் பாஜக மீது பழங்குடியின சமூகங்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தை தனக்கு சாதகமாக ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது.
இத்தனை தொகுதிகளா?
உதாரணமாக, டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 35 தொகுதிகள் தெற்கு குஜராத்தில் உள்ள பரூச், நர்மதா, டாபி, டாங், சூரத், வல்சாத், நவசாரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்கள் யாவும் பழங்குடி சமூகங்களின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். இந்த 35 தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு இங்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பெரும்பலான தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது. இதனால் முதல்கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு அடிவிழும் என கூறப்படுகிறது.