ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு 27-ல் அடிக்கல்- மனோகர் பாரிக்கர் உறுதி
டெல்லி: வரும் 27 ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு நினைவிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரெயன் பேசினார். அப்போது, "குரு பூர்ணிமா தினத்தில் குருவைப் போற்றுவோம். ஆனால், நம் வாழ்வில் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த சிறந்த குருவான அப்துல் கலாம் மறைந்து அடுத்த வாரம் ஓராண்டு ஆகப் போகிறது. அவருக்கு இன்னும் நினைவிடத்தைக் கூட நாம் கட்டவில்லை.
அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிட மைதானத்தில் தகரக் கூரையின் கீழாக நாய்கள் நடமாடிக் கொண்டு இருக்கின்றன. கலாம் நினைவிடத்துக்கான நிலத்தைப் பெற மத்திய அரசு முயற்சி எதுவும் செய்வதில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதிலளித்து பேசுகையில், "கலாம் நினைவிடத்தை கட்ட தமிழக அரசும் ஆதரவளிக்கிறது. இந்த விஷயத்தில் ஏற்கெனவே தீர்மானித்தபடி, கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை வரும் 27-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான வடிவமைப்பும் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே, அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் 2 பகுதிகளாக உள்ள 2.64 ஏக்கர் அளவிலான நிலம் நேற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கலாம் பவுண்டேஷன் நிர்வாகிகள் வழங்கினர்.