போலீஸ்காரருக்கு “பளார்” – மகாராஷ்டிர கொலைக் குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்கு!
தானே: மகாராஷ்டிர மாநிலத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் போலீஸ்காரரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கைச் சேர்ந்தவர் சபீர் அலி சையத். இவர் தானே மாவட்டம் மும்பரா நகரில் வசிக்கும் தனது உறவினரான ஆரிப் கானின் 16 வயது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் தந்தை சம்மதிக்கவில்லை.
பெண்ணை குத்திக் கொலை:
இதனால் ஏற்பட்ட பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த திங்கட்கிழமை அந்த பெண்ணை சையத் குத்திக் கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது தந்தையையும் தாக்கியுள்ளார்.
போலீசில் வழக்குப் பதிவு:
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.
கோர்ட்டுக்கு செல்ல திட்டம்:
விசாரணை முடிந்து நேற்று அவரை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றினர்.
போலீஸ்காரருக்கு அறை:
அப்போது வேகமாக வேனுக்குள் ஏறும்படி ஒரு போலீஸ்காரர் உத்தரவிட ஆத்திரமடைந்த சையத் அந்த போலீஸ்காரரை அறைந்துள்ளார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஒரு வழக்கு:
ஏற்கனவே சையத் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து காயப்படுத்தியதாக மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.