"என்னை பலாத்காரம் செய்த மத்திய அமைச்சரை டிஸ்மிஸ் செய்யுங்கள்"- பெண் கதறல்
டெல்லி: நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள மத்திய இணை அமைச்சர் நிகல் சந்த்தை பதவியில் இருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் அபுப்சேர் என்ற பகுதியை சேர்ந்த 24வயது பெண்மணிக்கும் அம்மாநிலத்தின் ஹனுமான்கர் மாவட்டத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கும் 2010, டிசம்பர் 20ம்தேதி திருமணமாகியிருந்தது.

திருமணத்துக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தம்பதிகள் இடம் பெயர்ந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு அமர்த்தி வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் ஓம்பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து 2011ல் அப்பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த கணவன், ஓம்பிரகாஷ், எனக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்கினார். இந்த புகாரில் நிகல்சந்த் உட்பட 17 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இவ்வழக்கில் தொடர்புள்ள நிகல்சந்த் உட்பட 17 பேருக்கும் ஜெய்ப்பூர் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிகல்சந்த் மத்திய உரத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நிருபர்களிடம் கூறுகையில், நிகல்சந்த் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறுமாறு எனக்கு அவர் தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு அளிக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
நிகல்சந்த் தனது தவறை மறைக்கலாம், ஆனால் உண்மையை மறைக்க முடியாது. என்னை நிகல்சந்த் என்ன செய்தார் என்பது எனக்கு நன்றாக நினைவுள்ளது. நரேந்திரமோடி நல்ல மனிதர். ஆனால் அவரது அமைச்சரவையில் நிகல்சந்த் இருப்பது பொருத்தமற்றது. உடனடியாக அமைச்சரவையில் இருந்து நிகல்சந்த்தை பதவி விலக்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசிய மோடி, இப்படி ஒரு நபரை தனது அமைச்சரவையில் வைத்திருப்பது நியாயமில்லை. மகளிர் காங்கிரஸ் இதுதொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications