நடிகை 'குத்து' ரம்யாவுக்கு அமைச்சர் பதவி- 'ஒக்கலிகா' சமூகத்தை சமாதானப்படுத்த ராகுல் அதிரடி!
பெங்களூரு: கர்நாடகாவில் அதிரடியாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதால் வன்முறை வெடித்து அமளி துமளி நீடிக்கிறது... இந்த நிலையில் நடிகை ரம்யாவை எம்.எல்.சி.யாக்கி அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பரிந்துரைத்துள்ளது அக்கட்சியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அம்பரீஷ் உட்பட 14 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். அன்றே 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அடுத்த சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டே காங்கிரஸ் மேலிடம் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அம்பரீஷ் தமது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார். அவர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

அம்பரீஷை வளைக்கும் பாஜக
இதனிடையே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வகையில் அம்பரீஷை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடிகர் அம்பரீஷ் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் ஒக்கலிகா சமூகத்தினர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குத்தான் பொதுவாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகள், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த நிலையில் அம்பரீஷை வளைத்துப் போட்டால் ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளை கணிசமாக கைப்பற்றலாம் என்பது பாஜகவின் வியூகம்.

அம்பரீஷுக்கு பதில் குத்துரம்யா
இதை உடைக்கும் வகையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அதே ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான குத்து ரம்யாவை அமைச்சராக்க முதல்வர் சித்தராமையாவுக்கு பரிந்துரைத்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக ரம்யா இல்லாவிட்டாலும் கர்நாடகா சட்டமேலவை உறுப்பினராக்கி (எம்.எல்.எசி) அமைச்சரவையில் சேர்க்குமாறு ராகுல் கூறியுள்ளாராம். இதன் மூலம் ஒக்கலிகா சமூகத்தினரை சமாதானப்படுத்திவிட முடியும் என கருதுகிறாராம் ராகுல்.

ஏழாம் பொருத்தம்
கர்நாடகா காங்கிரஸில் அம்பரீஷுக்கும் குத்து ரம்யாவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தாம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதற்கு அம்பரீஷின் உள்ளடி வேலைதான் காரணம் என கருதுகிறார் ரம்யா... அம்பரீஷ், ரம்யா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானதும் உண்டு. தற்போது ரம்யா அமைச்சராக்கப்படலாம் என்பதால் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு ரம்யாதான் காரணம் என்கிறது அம்பரீஷ் தரப்பு.

மாண்டியாவில் பின்னடைவு
தற்போது அம்பரீஷ் தம்முடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நிச்சயம் மாண்டியா மாவட்டத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவைத்தான் தரும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications