பற்றி எரியும் காஷ்மீர் விவாதத்தில் பாட்டுபாடி கூத்தடித்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒரு மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது... அங்கு இயல்புவாழ்க்கை முடங்கிப் போய்கிடக்கிறது... இது தொடர்பாக ராஜ்யசபாவில் சீரியசான விவாதம் நடந்த போது கொஞ்சம் கூட மனசாட்சியோ ஈவிரக்கமே இல்லாமல் "காஷ்மீர்... பியூட்டிபுல் காஷ்மீர்" என பாட்டுப்பாடி, காஷ்மீரில் சோறு நல்லா இருக்கும்; வயலு நல்லா இருக்கும் என கூத்தடித்திருக்கிறார் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 9-ந் தேதி முதல் அங்கு தொடர்ந்து போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் இதுவரை சுமார் 59 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் 6,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையினர் ஆவர்.
இப்படி ஜம்மு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆகையால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது. இதை ஏற்று ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் எம்பி, காஷ்மீர் பற்றி எம்.ஜி.ஆர். பாட்டுப்பாடி, அங்கு சோறு நல்லா இருக்கு; வயலு நல்லா இருக்கு; நானும் அம்மா புண்ணியத்துல சுற்றிப் பார்த்தேன்; அங்கிருந்த நீதிபதிகள் வந்தாங்க... நான் மெரீனா பீச், பாண்டிச்சேரிக்கு கூட்டிகிட்டுப் போனேன்னு கொஞ்சம்கூட அக்கறையேதுமில்லாமல் பெரும் கூத்தடித்தார்.
நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேசியதாவது:
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர்
இது மிகவும் பிரபலமான பாட்டு... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடி நடித்திருப்பார்.
மீண்டும் பாடுகிறேன்
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர்
காஷ்மீரில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை... காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இந்தியா ஒன்றுதான்...
நான் ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புகிறேன்... காஷ்மீரில் விளையும் குங்குமப்பூவைத்தான் தமிழகத்து கர்ப்பிணி பெண்களுக்கு இப்போதும் கொடுக்கிறார்கள்... அழகான குழந்தை பிறப்பதற்காக இது கொடுக்கப்படுகிறது...
என் மனைவியும் அதை சாப்பிட்டார்.. என் மகளும் சாப்பிட்டார்... நாளை என் பேத்தியும் சாப்பிடுவார்... ஆகையால் நான் காஷ்மீரைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் தேர்வாணையத்தில் இருந்த போது காஷ்மீரைப் பார்க்க சென்றேன். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா புண்ணியத்தால் இது சாத்தியமானது. அங்கே தங்கி நான் பல இடங்களைப் பார்வையிட்டேன். கோவில்களுக்குப் போனேன்... நல்ல உணவுகள் கிடைத்தன.. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
நான் காஷ்மீரின் வேளாண்நிலங்களைப் பார்த்தேன்... அதுவரை தஞ்சாவூர்தான் செழிப்பான விளைநிலம் உள்ள இடமாக நினைத்தேன்.. காஷ்மீரைப் பார்த்த பிறகு என்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டேன்.
நான் படித்துக் கொண்டிருந்தபோது தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும் போவோம்...நாகூர் தர்காவுக்கும் போவோம்... வேளாங்கண்ணி கோவிலுக்கும் போவோம்.. அனைத்து இடங்களிலும் பிரார்த்திப்போம்..
ஆகையால் காஷ்மீரில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது... எங்கே தவறு நடந்திருக்கிறது? யார் பிரச்சனைக்கு காரணம்? அதை கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும்.
காஷ்மீரத்து மக்கள் தமிழகத்தை நேசிக்கிறார்கள். 15 காஷ்மீர நீதிபதிகள் சென்னைக்கு வந்திருந்தார்கள். அப்போது அட்வகேட் ஜெனரலாக நான் இருந்தேன். அவர்கள் மெரீனா பீச், மாமல்லபுரம், பாண்டிச்சேரி போக விரும்பினார்கள்.... அத்தனைக்கும் நான் ஏற்பாடு செய்தேன். அவர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒருவர் தலைமை நீதிபதியாக, மற்றொருவர் மூத்த நீதிபதியாக காஷ்மீர் சென்றிருக்கிறார். ஆகையால் காஷ்மீருக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
தமிழக மக்கள் அழகான அமைதியான காஷ்மீரையே விரும்புகிறார்கள். அதுதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் விருப்பம்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர கடவுளை வேண்டுகிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி..












Click it and Unblock the Notifications