எதில்தான் சாங்கியம் பார்ப்பதுன்னு கிடையாதாம்மா!
தெய்வ குத்தம் என்று நினைத்து சடைமுடியை வெட்டாத புனே பெண்மணி.
புனே: கடவுள் நம்பிக்கைக்கு ஒரு அளவு வேணாமா? எதில எதில சாங்கியம் பாக்கிறதுன்னு கிடையாதா? புனேவில் ஒரு பெண்ணின் முத்தி போன பக்தியை படிங்க.
புனேவில் வசித்து வருபவர் கலாவதி பர்தேசி. இவருக்கு 50 வயது ஆகிறது.. இவர் பார்க்க நாகரீகமாகவே இருக்கிறார். ஆனால் அவரது முடியோ, சிக்கு பிடித்த மாதிரி கிடந்தது. தலை பூரா செம்பட்டை. சடை சடையா தொங்கிட்டு இருந்தது. உங்கள் முடி ஏன் இப்படி இருக்கிறது? அதை கொஞ்சம் வெட்டிவிடலாமே என்று கேட்டால் அதற்கு ஒரு பெரிய விளக்கமே அளிக்கிறார் கலாவதி.
4 தஅடி நீளம் முடி
"இல்லை.. இல்லை.. வெட்டக்கூடாது. அப்படி வெட்டிட்டா அது தெய்வக்குத்தம் ஆயிடும்ன்னு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். அவங்களுக்கும் இந்த சமுதாயத்துக்கும் பயந்துபோய்தான் நான இப்படி முடியே வெட்டாம விட்டுட்டேன், இப்படியே 17 வருஷம் ஆகிடுச்சு. முடியும் 4 அடிக்கு வளர்ந்திருச்சு" என்றார்.
ரொம்ப அவமானப்பட்டேன்
தொடர்ந்து பேசும் கலாவதி, ''17 வருஷமா முடி வெட்டாம நான் இப்படி இருக்கறதால, நான் ரொம்ப அசிங்கப்பட்டு இருக்கேன். பல இடங்களில என்னை நிராகரிச்சிடுவாங்க. அவ்வளவு எதுக்கு, எங்க சொந்தக்காரங்க கூட என்னை எதிலயும் சேத்துக்க மாட்டாங்க. என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டா என் சாபம் அவங்களை தொத்திக்குமாம், அதனாலேயே எனக்கு எங்கியும் வேலையும் தரல. கடைசியில இது என்னாச்சுன்னா, சாப்பிட முடியாம, தூங்க முடியாம ஆயிட்டேன்." என்று சொல்லி முடித்தார் கலாவதி.
17 வருஷ முடி
சரி, இப்போ கலாவதி எப்படி இருக்கார் தெரியுமா? ஜம்முன்னு ஆயிட்டார். ஆமாம்... 17 வருஷமா வளர்த்த முடியை வெட்டிட்டார். பயந்து பயந்து தினம் தினம் அவஸ்தைப்படுவதை விட என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்னு நேரா பக்கத்துல இருந்த சலூனுக்கு போனாராம். தன் முடியை வெட்டி விடுங்கன்னு போய் கடைக்காரன்கிட்ட சொன்னாராம். அந்த சலூன் கடைக்காரன் கலாவதி தலைமுடியை உற்று உற்று கொஞ்ச நேரம் பார்த்திருக்கிறான். சரி, முடியை வெட்டிவிடறோம், ஆனால் 60 ஆயிரம் ரூபாய் தாங்க என்று கலாவதியிடம் கேட்டிருக்கிறார்.
60 ஆயிரம் ரூபாயா?
"என்னது, முடியை வெட்ட 60 ஆயிரமா?" என்று திகைத்த கலாவதி, அவ்வளவு காசு தன்னிடம் இல்லை என்று சொல்லி கடையை விட்டு வெளியே வந்துவிட்டு அந்த முடியுடனே மீண்டும் நடமாட துவங்கியுள்ளார். ஆனால் மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி என்ற அமைப்பினர் கலாவதியின் சடை முடியை வெட்டி விட்டார்கள். கூடவே கலாவதியின் மூடநம்பிக்கையும் சேர்த்தே கத்தரித்து எடுத்து விட்டார்கள்.
75 சடைமுடைகள் அகற்றம்
நரேந்திர தபோல்கர் நிறுவிய அமைப்புதான் இந்த மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி. மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி அவர். அவர் மறைந்தாலும் அவரது சேவையை இந்தஅமைப்பினர் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அமைப்பின் மூலம் புனேவில் மட்டும் சுமார் 75 பெண்களுக்கு சடை முடிகள் அகற்றப்பட்டுள்ளதாம்.
நிர்மூலன் சமிதி
கடவுளின் கோபத்தால்தான் தலையில் சடைமுடி ஆகிறது என்ற மூடநம்பிக்கை இன்னும் நம் நாட்டில் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் சுகாதாரக் குறைபாட்டால் மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட பொருள் முடியில் பட்டுவிட்டால் இப்படி சடை முடி உருவாகிவிடும் என்பதை இன்னும் நாட்டின் பல பகுதிகளில் பறை சாற்ற வேண்டி உள்ளது. எப்படியோ, மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி மூலம் கலாவதி இப்போது சீராகிவிட்டார். இந்த சமிதி கொஞ்சம் நம்ம ஊர் பக்கம் வந்தாலும் நல்லாதான் இருக்கும்!!