நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன்சிங் ரொம்ப நல்லவர்- சோனியா சர்ட்டிபிகேட்! ஆதரவு பேரணி!!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் மிகவும் நல்லவர்.. உண்மையை நிரூபிப்பார் என்று நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா ஆகியோர் அடுத்த மாதம் 8-ந் தேதி நேரில் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல் முறையாக நீதிமன்றப் படியேறி, குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் இவ்விவகாரத்தில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுடன் கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் வீடுவரையில் அவர்கள் பேரணியாக சென்றனர்.
பின்னர் பேசிய சோனியா, டாக்டர் மன்மோகன் சிங் அவருடைய நேர்மைக்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் அறியப்பட்டவர். நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக உள்ளோம். இவ்விவகாரத்தில் நாங்கள் சட்டரீதியாக போராடுவோம். அவர் நிரூபிப்பார் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்,












Click it and Unblock the Notifications