காங். கட்சிப் பணிக்காக அமைச்சர்கள் குலாம்நபி, ஜெய்ராம், ஆனந்த் சர்மா, சச்சின், ஜிதேந்தர் விடுவிப்பு?
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்குவதால் கட்சிப் பணிக்காக மத்திய அமைச்சர்கள் பலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட இருக்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட்டை நியமித்து கட்சியை பலப்படுத்தி லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.
இப்படி கட்சிப் பணிக்காக அனுப்பப்படும் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் என பல மூத்த அமைச்சர்கள் பெயரும் இருக்கிறதாம். இன்னும் சிலர் தாங்களாகவே ராஜினாமா செய்யவும் முன்வந்துள்ளனராம்.
காங். கமிட்டியும் மாற்றியமைப்பு
இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையும் மாற்றியமைக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது தற்போது பொதுச் செயலாளர்களாக இருக்கும் சிலர் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட உள்ளனர்.
இதனால் அவர்கள் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு புதிதாக சிலர் நியமிக்கப்படாம் எனத் தெரிகிறது. ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான ஜிதேந்தர் சிங் பன்வர், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படலாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.
ஜிதேந்தர்சிங் பன்வர் ஏற்கெனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருக்கும் அசோக் தன்வர் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஏகப்பட்ட மாற்றங்களை செய்து கொண்டு தேர்தலுக்கு தயாராக மும்முரம் காட்டுகிறது காங்கிரஸ் மேலிடம்!
களைகட்டுது தேர்தல்!!












Click it and Unblock the Notifications