மேகி சர்ச்சையை அடுத்து தானாக முன்வந்து நூடுல்ஸை ஆய்வு செய்யும் ஐடிசி, ஹெச்.யூ.எல்.
மும்பை: மேகி நூடுல்ஸ் சர்ச்சையை அடுத்து ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தானாக முன்வந்து தாங்கள் தயாரிக்கும் நூடுல்ஸுகளை சோதனை செய்கின்றன.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது முதலில் உத்தர பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதயைடுத்து பிற மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து அதன் விற்பனைக்கு தடை விதித்தன.
இதையடுத்து நெஸ்லே மேகி நூடுல்ஸை சந்தையில் இருந்து வாபஸ் பெற்றது.
ஐடிசி
மேகியை அடுத்து அதிகமாக நூடுல்ஸ் தயாரிக்கும் ஐடிசி நிறுவனம் தானாக முன்வந்து தனது நிறுவன தயாரிப்புகளில் அளவுக்கு அதிகமாக ஈயம், மோனோசோடியம் க்ளூட்டமேட் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறது. தனது உணவு தயாரிப்புகள் அனைத்தையும் அந்நிறுவனம் ஆய்வகத்தில் சோதனை செய்து வருகிறது.
வாடிக்கையாளர்கள்
நூடுல்ஸ் பற்றி ஐடிசி நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் நிறுவன தயாரிப்புகளின் தரத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இருப்பினும் எங்கள் தயாரிப்புகள் தரமானவை, பாதுகாப்பானவை என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிபடுத்தவே இந்த சோதனைகள் என்றார்.
இந்துஸ்தான் யுனிலிவர்
சீன வகை நார் நூடுல்ஸை தயாரிக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனமும் மேகி நூடுல்ஸ் சர்ச்சையை அடுத்து தானாக முன் வந்து தனது தயாரிப்பை சோதனை செய்து வருகிறது.
நார் நூடுல்ஸ்
இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்டின் தயாரிப்பான நார் நூடுல்ஸுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி சான்றிதழ் அளிக்காததால் அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.