எனக்கும் வேணும்.. பத்ம பூஷணுக்காக அடிதடி... சாய்னா வழியில் விஜேந்தரும் போர்க்கொடி!
டெல்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தனது பெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என இந்திய குத்துச்சண்டை சங்கத்திடம்ன் குஸ்தியில் குதித்துள்ளார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பத்ம பூஷண் விருதுக்கு தன் பெயரை பரிந்துரைக்கவில்லை என தன் அதிருப்தியை டுவிட்டர் மூலம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஊடகங்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து, பரிந்துரைக் கடிதம் தாமதமாகக் கிடைத்ததாகக் கூறி சாய்னா பெயரை பத்ம பூஷண் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இணைத்தது விளையாட்டுத் துறை அமைச்சகம்.

இதன் மூலம் சாய்னா விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தன்னுடைய பெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் விஜேந்தர் சிங். 2010-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இந்நிலையில், ''பத்ம பூஷண் விருதுக்கு நான் தகுதியானவன். இந்திய குத்துச் சண்டை சங்கம் எனது பெயரை பரிந்துரைக்க வேண்டும்'' என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பிடம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் விஜேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாய்னாவும் 2010-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். 5 ஆண்டுகள் இடைவெளியில் பத்ம பூஷண் விருதுக்காக சாய்னாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மபூஷண் விருதுக்கு இப்படி அடிதடி ஏற்பட்டிருப்பது விருதின் மதிப்பு குறித்த கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications