நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்.. சந்திரபாபு நாயுடுவுக்கு வந்த சிக்கல்.. 2 நாள் விசாரிக்கும் போலீஸ்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் போலீசார் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முயன்றுள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் கடந்த மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இதனால் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறார் என சந்திரபாபு நாயுடு தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே தான் சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர மாநிலம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதற்கிடையே தான் நேற்று சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் என்பது 2 நாள் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த உத்தரவு வந்த அடுத்த சில மணிநேரங்களில் ஊழல் தடுப்பு படையின் சிஐடி போலீசார் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுதாகர் ரெட்டி வாதாடினார். அப்போது ‛‛சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் வைத்தே விசாரணை நடத்தப்படும். அவரிடம் விசாரணை நடத்தப்படும் வீடியோ, போட்டோக்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் விசாரணை குறித்த தகவல் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது'' என்றார்.
இதற்கு சந்திரபாபு நாயுடு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்றும், நாளையும் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விசாரைண என்பது ராஜமுந்திரி சிறையில் வைத்தே நடக்கிறது. வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்த திருப்பங்கள் ஏற்படலாம். இதனால் சந்திரபாபு நாயுடு கட்சியினர் ஷாக்கில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications