படிப்புக்கு ஏதுய்யா வயசு?: 95 வயதில் எம்.ஏ. படிக்கும் பீகார் தாத்தா
பாட்னா: பீகாரைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெறுவதற்காக நாலந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வைஷ்யா(95). ஜர்க்கண்ட் மாநிலம் கொடர்மாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த அவர் கடந்த 1980ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற வேண்டும் என்பது அவரது கனவு.
இந்நிலையில் அவர் தற்போது எம்.ஏ. பட்டம் பெற நாலந்தா திறந்நவெளி பல்கலைக்கழகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். மனைவியின் மறைவுக்கு பிறகு இரண்டாவது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மகன் சந்தோஷ் குமார் பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவரது மருமகள் பாரதி பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.
படிப்பு பற்றி வைஷ்யா கூறகையில்,
பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது. நான் பட்டம் பெற வேண்டும் என்று இல்லை. பொருளாதாரம் பற்றி கற்று நாட்டுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டும் என்பது தான் என் எண்ணம். இந்த வயதில் படிப்பது எளிது அல்ல என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் என் ஆசையை புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்கிறார்கள். என் மகன் எனக்கு கணக்கு கற்றுக் கொடுப்பார். என் மருமகள் பிற பாடங்களில் உதவியாக இருப்பார்.
நான் தினமும் காலையும், இரவும் 2 மணிநேரம் படிப்பேன். எம்.ஏ. முடித்த பிறகு பி.ஹெச்.டி. படிக்க மாட்டேன். நான் சைவப் பிரியர். இன்று டென்ஷனால் மக்கள் அதிகம் பலியாகிறார்கள். மன அழுத்தம் இல்லாமல் வாழ இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் பிறந்தவர் வைஷ்யா. 1938ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் 1940ம் ஆண்டு சட்டத்தில் பட்டம் பெற்றார். ஆனால் குடும்ப பொறுப்பு காரணமாக முதுகலை பட்டம் பெற முடியவில்லை.












Click it and Unblock the Notifications