தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.9270 கோடி இழப்பு.. ஜிஎஸ்டி வரிக்கு ராஜ்யசபாவில் அதிமுக கடும் எதிர்ப்பு!
டெல்லி: ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் இன்று பிற்பகல் துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மசோதாவை அறிமுகம் செய்து விவாதத்தை தொடக்கி வைத்தார்.
விவாதத்தின் போது பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: ஜிஎஸ்டி மசோதா சட்ட விரோதமானது. அதிமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி மோதாவில் நிரந்த வரி விலக்கும், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்பட வேண்டும். வரி சதவீதம் எவ்வளவு என்று தெரியாமல் மசோதாவை நிறைவேற்றக் கூறுவது நியாயமாகாது.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் தமிழகத்துக்கு 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். வரி விதிப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். இது அரசியல் சட்டப் பிரிவு 21ஐ மீறுவதாகும்.
மாநில இழப்பீடு தொகையை 5 ஆண்டுகளுக்காவது தர வேண்டும் என்றவகையில் மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications