இரட்டை இலை விவகாரம்... கூடுதல் ஆவணம் தாக்கல் செய்தது சசி. அணி
இரட்டை இலை விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
டெல்லி: இரட்டை இலை விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
அதிமுக சின்னமான இரட்டை இலை எங்கள் அணிக்குத்தான் சொந்தம் என்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் கூறி வருகிறாரகள். இந்த நிலையில், இரண்டு அணியினரின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சசிகலா அணியினர் இன்று கூடுதல் ஆவணம் தாக்கல் செய்துள்ளனர்.
சசிகலா அணி சார்பில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார். 83,626 பிரமாணப்பத்திரங்கள் பெரிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் தற்போது சிறையில் உள்ளதால், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக (அம்மா) அணியில் உள்ள 50 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
நேற்று ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்தில் 40,000 பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.