இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி கூடுதல் ஆவணம் தாக்கல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக்கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக. இதுவரை சுமார் 20 லட்சம் பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் உள்ள சுமார் 75 லட்சம் தொண்டர்கள் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அதற்கு நோட்டரி பப்ளிக் அத்தாட்சியும் உள்ளது. அதனால் ஓபிஎஸ் அணியே உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் ." என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அணி, ஓபிஎஸ் அணியின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் வகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் , இரட்டை இலை சின்னம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.