ஏர் இந்தியா விமானத்தில் கேப்டனை அடித்த துணை விமானி
ஜெய்பூர்: ஞாயிற்றுக்கிழமை ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் கேப்டனை துணை விமானி தாக்கியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவன விமானம் ஏர்பஸ் ஏ-320 ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பத் தயாரானது. அப்போது கேப்டன் விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், எவ்வளவு எரிபொருள் உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரு சிறிய பேப்பரில் எழுதிக் கொடுக்குமாறு துணை விமானியிடம் கேட்டுள்ளார்.
அது எப்படி தன்னிடம் இந்த வேலையை அளிக்கலாம் என்று நினைத்து கோபம் அடைந்த துணை விமானி கேப்டனை விமானி அறையில் வைத்து திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் விமான சேவை ரத்து செய்யப்படும், அதனால் பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் என்று நினைத்த கேப்டன் நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவிக்காமல் விமானத்தை டெல்லிக்கு இயக்கினார்.
டெல்லியில் விமானத்தை தரையிறக்கிய பிறகு கேப்டன் விமானி அறையில் நடந்தது பற்றி ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்
துணை விமானிக்கும், கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுமூகமாக பிரச்சனை தீர்க்கப்பட்டது. துணை விமானி கேப்டனை தாக்கவில்லை என்றார்.
கேப்டனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள துணை விமானி 3 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் ஒருவரை விமானி அறையில் இருந்து வெளியே வந்து தனது சட்டையில் உள்ள ஸ்டார்களை அகற்றுமாறு கூறி அவருடன் சண்டை போட்டுள்ளார். அந்த பிறகு வேறு ஒரு கேப்டன் அந்த துணை விமானியின் முரட்டுத்தனம் பற்றி புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.