டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் சக்கரத்தில் தீப்பிடித்தது... 5 பயணிகள் காயம்
டெல்லி: டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 159-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று டெல்லி வந்தது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்க தயாரான போது, விமானத்தின் முன் சக்கரம் கீழே இறங்காமல் மாட்டிக் கொண்டு, அதில் தீப்பிடித்ததை கண்டு பிடித்தார் விமானி.
உடனடியாக இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
பின்னர் விமானம் தரையிறக்கப் பட்டது. விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் 5 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட்து.