மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- டெல்லியில் அவசர தரையிறக்கம்
டெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று காலை, டெல்லியில் இருந்து மஸ்கட் புறப்பட்டு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் 319இல் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து மஸ்கட் செல்லும் இவ்விமானத்தில் 80 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, "ஏர் இந்தியா விமானம் ஏ319 பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் நலமாக உள்ளனர்" என்று ஏர் இந்தியா பிரதிநிதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து மற்றொரு விமானம் மூலமாக பயணிகள் மஸ்கட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.