விமானம் கிளம்புவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் ஏர்போட்டிற்குள் இருக்க வேண்டும்: ஏர் இந்தியா அறிவிப்பு
டெல்லி: விமானம் கிளம்புவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பாகவே பயணிகள் விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த பதன்கோட் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளும் கடும் சோதனைகளுக்கு பின்னரே விமான நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே ஏர் இந்தியா பயணிகள் 3 மணிநேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும். அதன் மூலம் விமானங்கள் கிளம்புவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும் என்று ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்நாட்டு பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், சர்வதேச விமான பயணிகள் ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பாகவும் வரவேண்டும் என்பது விதியாக உள்ளது.