என்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வெளியேறி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதால், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு, யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

காஷ்மீரில் படிப்படியாக படைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய பகுதிகள் ரிசர்வ் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் முன்பாகவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல, விமானப்படை மற்றும் ராணுவத்தை உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், அச்சமடைந்த மக்கள், நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் விமானம் மூலமாக ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலையை விமான சேவை நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தின.
உதாரணமாக டெல்லியிலிருந்து - ஸ்ரீநகருக்கான விமான டிக்கெட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என்ற அளவில் இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து விமான டிக்கெட்டுகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது.
இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம், காஷ்மீருக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களின் கட்டணத்தை குறைத்துள்ளது. அந்த வகையில் ஸ்ரீநகர் செல்லும் அனைத்து விமானங்களுக்கும், 9 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த கட்டண குறைப்பு ஆகஸ்ட் 15 வரை தொடரும் எனவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனஞ்ஜெய் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications