தயாநிதி, கலாநிதி விடுவிப்புக்கு எதிரான அப்பீல் மனு.. பிப்.8-ல் விசாரணை
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையை பிப்.8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என கூறி நீதிபதி ஷைனி விடுதலை செய்தார்.

இதை எதிர் தரப்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ.
மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்தது. விடுதலைக்கு எதிராகவும், வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க டெல்லி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும் மனுவில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பகல் 2 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை தயார் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விரிவான பதிலை வரும் புதன்கிழமை தெரிவிக்கும்படி கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.
இதனிடையே வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ல் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்குத்தான் முக்கியமான வழக்கு என சுப்பிரமணியன் சுவாமி அடிக்கடி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications