ஸ்பைஸ்ஜெட் பங்குகளை 'வெறும்' ரூ2க்கு அஜய்சிங்குக்கு விற்பனை செய்த கலாநிதி மாறன்!
ஸ்பைஸ்ஜெட் பங்குகளை வெறும் ரூ2க்கு அஜய்சிங்குக்கு விற்பனை செய்திருக்கிறார் கலாநிதி மாறன்.
டெல்லி: ஸ்பைஸ்ஜெட் பங்குகளை அஜய்சிங்குக்கு வெறும் ரூ2-க்கு விற்பனை செய்திருக்கிறார் சன் குழும அதிபர் கலாநிதி மாறன்.
கலாநிதி மாறன் 2010-ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை வாங்கினார். சுமார் 4 ஆண்டுகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை நடத்திய கலாநிதி மாறனுக்கு ரூ2,000 கோடி நட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து 2015-ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட்டின் முந்தைய நிறுவனர் அஜய்சிங்குக்கு 35 கோடி பங்குகளை அதாவது 58.46% பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தார் கலாநிதி மாறன்.
சரிந்த பங்கு மதிப்பு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கலாநிதி மாறன் வாங்கும்போது அதன் ஒரு பங்கு ரூ48 என இருந்தது. ஆனால் விற்பனை செய்யும் போது பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட்டின் ஒரு பங்கு ரூ20 என படுமோசமாக குறைந்தது.
விற்பனை விவரம் மறுப்பு
இதனால் ஒரு பங்கு எத்தனை ரூபாய்க்கு கலாநிதி மாறன் விற்பனை செய்தார் என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. ஆனால் கலாநிதி மாறன் தரப்பு இதை தெரிவிக்க மறுத்து வந்தது.
டெல்லியில் வழக்கு
இதனிடையே அஜய்சிங் தமக்கு செலுத்த வேண்டிய ரூ679 கோடியை தர உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் வழக்கு தொடர்ந்தது.
அம்பலமான உண்மை
இவ்வழக்கில் மனுத்தாக்கல் செய்த கலாநிதி மாறன், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 58.46% பங்குகளை வெறும் ரூ2க்கு அஜய்சிங்குக்கு விற்பனை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இவ்வளவு குறைவான விலைக்கு பங்குகளை விற்பனை செய்த நிறுவனம் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட்தான்.
கலாநிதிக்கு சாதகமாக தீர்ப்பு
ஆனால் பங்குகள் ரூ2-க்கு விற்பனை செய்யப்பட்டதை ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் கலாநிதி மாறனுக்கு ரூ250 கோடியை செலுத்தியாக வேண்டும் என சாதகமான தீர்ப்பை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.