தொழிற்சங்க பந்த்... நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பிற்பகல் நிலவரம் என்ன?
பெங்களூர்: நாடு தழுவிய அளவில் நடக்கும் போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்தால் பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சட்ட திருத்தத்தை விரைவில் மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஆகியவற்றின் வேலை நிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை
தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. மேலும் கால் டாக்சிகள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

பெங்களூர்
ஐ.டி. நகரமான பெங்களூரில் அரசு பேருந்துகள் ஒன்று இரண்டு இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தனியார் நிறுவன கேப்கள் இயக்கப்படுகின்றன. கேப்களை இணையதளம் மூலம் புக் செய்ய முடியவில்லை. ஆப்கள் மூலம் மட்டும் புக் செய்ய முடிகிறது.

டெல்லி
டெல்லியில் ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை. ஆனால் டெல்லி அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் வழக்கம் போன்று இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு செல்லும் டாக்சிகள் இயக்கப்படவில்லை.

கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று மமதா அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக ஆகியவை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் இன்று மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. கொல்கத்தாவில் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. மாநிலத்தின் சில பகுதிகளில் போலீசாருக்கும், இடதுசாரியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஜெய்பூர்
ராஜஸ்தானில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. 22 ஆயிரம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications