ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்? டெக் மகிந்திரா, தெலுங்கானா அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
டெக் மகிந்திரா நிறுவனத்தின் ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது தொடர்பாக அந்த நிறுவனமும், தெலுங்கானா அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேஷன் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் சோற்றுக்கு உளை வைத்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டார். இதனால் அவுட்சோர்சிங் துறையில் கடும் சரிவை சந்தித்த முன்னணி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை காரணம் ஏதுமின்றி வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹைதராபாதில் உள்ள டெக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றிய 4 பேரை அந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து அந்த 4 பேரும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ராமசந்திர ராவ் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த வழக்கில், நாங்கள் 4 பேரும் சட்டவிரோதமாக பணியிலிருந்த நீக்கப்பட்டுவிட்டோம். இதுகுறித்து தொழிலாளர் நலத் துறையை நாடினோம். ஆயினும் அவர் எங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் வேலையை இழந்துள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகிறோம் என்று ஊழியர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதி கூறுகையில், நீக்கப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளாதது ஏன்? இதுகுறித்து டெக் மகிந்திரா விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் பணிநீக்க நடவடிக்கை சட்டப்படி நிகழ்ந்துள்ளதா என்பதை ஆராயத் தவறியது ஏன் என்பது குறித்து தொழிலாளர் நலத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் இன்னும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications