ராணுவம் குவிப்பு, கண்ணிவெடிகள் கண்டெடுப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து.. காஷ்மீரில் உச்சகட்ட பரபரப்பு
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க முயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாகவும், யாத்திரை பாதையில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்திய ராணுவம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
"கடந்த 3 நான்கு நாட்களில், பாகிஸ்தானின் ஆதரவுடன் தீவிரவாதிகள் மற்றும் அதன் ராணுவம் இணைந்து அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க முயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் முழுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் பல முக்கிய விஷயங்கள் தெரியவந்தன"என்று சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் இன்று நிருபர்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை சின்னங்களுடன்கூடிய கண்ணிவெடி மற்றும் தொலைநோக்கி வசதி கொண்ட எம் -24 அமெரிக்க துப்பாக்கி ஆகியவை தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்ணிவெடி மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி ஈடுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக உள்ளது. இதை நடக்க விடமாட்டோம். இவ்வாறு தில்லன் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு 100 கம்பெனி அதாவது 10,000 அளவுக்கான துணை ராணுவ படைகள் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. மேலும் 28,000 பாதுகாப்பு வீரர்கள் விரைவில் காஷ்மீர் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீரில் தங்குவதை "உடனடியாக" கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநில அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு பக்கம் படை குவிப்பு, மறுபக்கம், கண்ணிவெடிகள் கண்டெடுப்பு, அதேபோல அமர்நாத் யாத்ரீகர்கள் வாபஸ் அனுப்பப்படுதல் என காஷ்மீரில் மர்மமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications