சுவிஸ் வங்கியில் கருப்பு பணம்: பர்மன் பெயரை முன்பே சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கடந்த 2012ம் ஆண்டே வெளியிட்டார். அதில் இருந்தவர்களின் சில பெயர்கள் தான் தற்போது கசிந்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 3 பேரின் பெயர்கள் கசிந்துள்ளன. டாபர் நிறுவன முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், குஜராத் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் பங்கஜ் சமன்லால் லோதியா, கோவாவை சேர்ந்த கனிம சுரங்க அதிபர் ராதா டிம்போலா ஆகியோரது பெயர்கள் தான் கசிந்துள்ளன.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டே ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் இடம்பெற்ற பெயர் விவரம் வருமாறு,
முகேஷ்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளிநாட்டு வங்கியில் ரூ.500 கோடி பதுக்கி வைத்திருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
அனில் அம்பானி
முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழில் அதிபருமான அனில் அம்பானி ரூ.100 கோடி பதுக்கி வைத்துள்ளார். அவர்களின் தாய் கோகிலாபென் அம்பானி பெயரில் வெளிநாட்டு வங்கியில் கணக்கு இருந்தாலும் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர் கணக்கில் பணம் எதுவும் இல்லை.
சந்தீப்
முன்னாள் அமலாக்கப்பிரிவு அதிகாரியும், மோதக் தலைவருமான சந்தீப் டாண்டன் பெயரில் ரூ.125 கோடியும், அவரது மனைவி அனு பெயரில் ரூ.125 கோடியும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோயல்
ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் ரூ.80 கோடி பதுக்கியுள்ளார்.
பர்மன்
டாபர் நிறுவனத்தின் உரிமையாளர்களான பர்மன் குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் சந்த், பிரதீப் சந்த், ரத்தன் சந்த் ஆகியோர் ரூ.25 கோடியை பதுக்கியுள்ளனர்.
700 பேர்
700 இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பிரான்ஸ் இந்திய அரசிடம் கடந்த 2006ம் ஆண்டு சிடி ஒன்றை அளித்தது என்றார் கெஜ்ரிவால். 700 இந்தியர்கள் ரூ.6 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார் கெஜ்ரிவால்.