தமிழ் பேசுகிற ஒருவர் ஒடிஷாவின் முதல்வராவதா? ’தமிழர்’ விகே பாண்டியனை மீண்டும் இலக்கு வைத்த அமித்ஷா!
ஜெய்ப்பூர்: ஒடிஷாவின் முதல்வராக தமிழ் பேசுகிற ஒருவரையா (விகே பாண்டியன்) தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி நிச்சயமாக ஒரியா மொழி பேசுகிற ஒருவரைத்தான் ஒடிஷாவின் முதல்வராக்குவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.
ஒடிஷாவின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உருவெடுத்திருப்பவர் விகே பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியன், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கரம். ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் விகே பாண்டியன்.

தற்போது ஒடிஷா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் ஒடிஷா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் விகே பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதை ஏற்க முடியாத பாஜக தொடர்ந்து அவரையே இலக்கு வைத்து பேசி வருகிறது. விகே பாண்டியனை குறிவைப்பதாக நினைத்து, பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு போய்விட்டார்கள் என பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையானது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதெப்படி ஒடிஷாவை ஒரு தமிழர் ஆட்சி செய்ய அனுமதிப்பீர்களா? என விகே பாண்டியனை குறிவைத்து விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஒடிஷாவின் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் விகே பாண்டியனை டார்கெட் செய்தார் அமித்ஷா. இன்றைய தேர்தல் பிரசாத்தில் பேசிய அமித்ஷா, ஒட்டுமொத்த தேசமும் ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடியது. ஆனால் ஒடிஷாவின் நவீன் பாபுவும் தமிழ் பாபுவும் (விகே பாண்டியன்) அவர்தான் அடுத்த அரசியல் வாரிசு.. ஒடிஷா மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ராம பக்தர்களை தடுத்து நிறுத்திய சக்திகள் யார் என்பதை சொல்லுங்கள் மக்களே!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிஷாவின் முதல்வராக அனுமதிக்கலாமா?நாட்டின் பிரதமர் மோடி, ஒரியா மொழி பேசும் முதல்வரை உங்களுக்காக தருவார்.. நம்பிக்கையோடு இருங்கள்.. அந்த முதல்வர் ஒடிஷாவைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றார்.
ஒடிஷாவின் இன்றைய கஞ்சம், கஜபதி, ராயகடா, கோரபுட், நபரங்கபூர், மல்காங்கிரி ஆகியவை அனைத்தும் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தன. ராயகடா, கோரபுட், மல்காங்கிரி மாவட்டங்களின் பெரும்பாலான பழங்குடிகள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பழந் தமிழைப் பேசக் கூடிய ஆதி பழங்குடிகளாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications