சாமியார் ராம் ரஹீம் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் உருக்கமான கடிதம் இதுதான்..!
பாலியல் பலத்தகார வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீமின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்தது, பெண் ஒருவரின் கடிதம்தான்.
டெல்லி: குர்மீத் ராம் ரஹீம் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இப்போது ஊடகங்கள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று கடந்த வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.
31 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, பஞ்சாபி, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராம் ரஹீம் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதற்கு அடிப்படையாக இருந்தது, பெண் துறவியின் கடிதம்தான். பெண் துறவி கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், அரியானா - பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமாருக்கும் கடிதம் எழுதினார்.

வலுவான ஆதாரம்
தனக்கும், அங்கிருக்கும் பெண் துறவிகளுக்கும் நேர்ந்த பாலியல் கொடூரங்கள் தொடர்பாக அதில் விளக்கமாக எழுதி இருந்தார். இக்கடிதமே வழக்கில் வலுவான ஆதாரமாக இருந்தது. சிபிஐ விசாரணையும் அதனடிப்படையிலேயே நடந்துள்ளது.

100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை
பாதிக்கப்பட்ட பெண் சீடர் எழுதிய கடிதத்தில் என்னை போன்று ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர் என எழுதியுள்ளார்.

பாதாள அறையில் ராம் ரஹீம்
"நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பத்தின்பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன். ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் வசித்தார்.

ஆபாச படம் காட்டினார்
ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அங்கு சென்றபோது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது.

கைத் துப்பாக்கி வைத்திருந்தார்
அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன். குர்மீத் ராம் இப்படிபட்டவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
Recommended Video


விருப்பமான பெண் துறவி
தொலைக்காட்சி பெட்டியை அணைத்த அவர், என்னை தனக்கு விருப்பமான பெண் துறவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். என்னுடைய மறுப்பை தெரிவித்தேன்.

நான் கிருஷ்ணரை போல
‘கடவுள்' என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா? என கேள்வியை எழுப்பினேன். ஆனால் குர்மீத் ராம், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

கொலை மிரட்டல்
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த காரணத்தினால் என்னை மிரட்டினார். என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். எனக்கு அரசியல் பலமும் உள்ளது, பண பலமும் உள்ளது, அவர்கள் எனக்கு எதிராக ஒன்று செய்யமாட்டார்கள் என கூறினார்.

கட்டாய பாலியல் உறவு
அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல. என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம் செய்தார்.

மருத்துவ பரிசோதனை
சுமார் 45 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். எனது பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டால் நான் கொல்லப்படுவது உறுதி. எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் உண்மையை கூறத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்" என்று அந்தப்பெண் துறவி கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications